Tue. Jul 7th, 2026 18:00:48
இலங்கை

சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது!

admin - May 12, 2026

“நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது வழங்கும் விழா”

2025ஆம் ஆண்டிற்கான நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையிலான தர முகாமைத்துவம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, 30.04.2026 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டாக்டர் ஆர். சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

“ஒவ்வொரு சிசுவுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பராமரிப்பு” (Safe Care for Every Newborn and Every Child) என்ற 2025ஆம் ஆண்டிற்கான கருத்துப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

நோயாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், சுகாதார சேவைகளின் தரத்தையும் திறனையும் உயர்த்துதல் மற்றும் திட்ட முன்மொழிவுகள் மூலம் புதுமை மற்றும் ஆராய்ச்சி கலாசாரத்தை வைத்தியசாலைகளுக்கிடையில் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு இந்நிகழ்வில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், பணிமனையின் தர முகாமைத்துவ மற்றும் நோயாளர் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சகாயதர்ஷினி அவர்களின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.