செல்லையா பேரின்பராசா .
துறைநீலாவணை கண்ணகி கலைக்கழகம், யுனைட்டெட் விளையாட்டுக் கழகம், மற்றும் கண்ணகி இளைஞர் கழகம் இணைந்து நடாத்திய ” சத்தியவான் சாவித்திரி ” எனும் கரகக் கலைஅரங்கேற்று விழா துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள திடலில் அமைக்கப்பட்ட களரியில் 13.06.2026 மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
முன்னதாக இவ் விழாவுக்கு அதிதிகளாக அழைக்கப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் , துறைநீலாவணை மண்ணின் மைந்தர்களான கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. பே சச்சிதானந்தம் , கிழக்குப் பல்கலைக் கழக சமூக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் ந.புஸ்பராசா ஆகியோர் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நிலபாவாடை விரித்து மலர்மாலைகள் அணிவித்து கிராமிய இசை முழங்க வரவேற்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கரகாட்டக்கலையில் பங்கேற்ற சிறார்களுக்கான ஆசீர்வாதம் இடம்பெற்றதுடன், அதிதிகள் மற்றும் கிராமிய கலைவளர்க்கும் கலைஞர்கள் பொன்னாடை போர்த்தியும் பா வாழ்த்துமடல் வழங்கியும் கொரவிக்கப்பட்டனர்.
துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலய உதவி பூசகரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான .சசிகரனின் தொடக்கவுரையுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் ஓய்வு நிலை அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வை துறைநீலாவணை மகாவித்தியாலய பிரதி அதிபர் இ.லிங்கநாதன், ஆசிரியர் தி.கோகுலராஜ் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.













