Tue. Jul 7th, 2026 18:00:07
பிரதான செய்தி

நாட்டை வீழ்ச்சியடையச் செய்த ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும் : சட்டம் யாவருக்கும் சமம் : ஜனாதிபதி

admin - June 25, 2026

ஊழல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சொத்துகள் குறித்து ஜனாதிபதி கருத்து

ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான பணம் டொலர் வடிவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகள் வீழ்ச்சியடைவதற்கு ஊழலே முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை அல்ல என்றும், போதைப்பொருள் வர்த்தகம், குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் மூலம் ஈட்டப்பட்ட பணம் அனைத்தும் TT (Telegraphic Transfer) ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அரசாங்கமாக தாம் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த விசாரணைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுவதாகக் கூறி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். பலருக்கு எதிராக பிடியாணைகள் பெறப்பட்டுள்ளதாகவும், சிலர் நீதிமன்றத்தை எதிர்கொள்ளாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றத்தில் தங்களது தரப்பை முன்வைத்து சட்டரீதியாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.