Tue. Jul 7th, 2026 16:43:51
இலங்கை

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு

admin - May 11, 2026

பாறுக் ஷிஹான்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்இ விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையிலான குழுவினர், பிரதேசத்திலுள்ள 14 இரவு நேர உணவகங்களைச் சல்லடை போட்டுத் தேடினர். இதில் உணவு கையாளப்படும் விதம், சமையலறைத் தூய்மை மற்றும் சேமிப்பு முறைகள் குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை மிக மோசமான முறையில் மீறிச் செயற்பட்ட 02 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட பெருமளவிலான உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர். சோதனைக்கு மத்தியில், உணவக உரிமையாளர்களுக்குத் தரமான உணவை வழங்குவது மற்றும் சமையலறைகளைப் பராமரிப்பது குறித்துத் தெளிவான ஆலோசனைகளும் அதிகாரிகளால் வழங்கப்பட்டன.